Friday, August 6, 2010

Shanthi's Collections

அலாதி காதல் என்றேன்


கலாதி செய்தது யாரோ?

அலைவு கொண்டது ஏனோ

அவச்சுழி வந்ததாலோ?

பிரசாபதி செய்த பிழையால்

காதல் பிடி விட்டதோ?

பிரசாதம் எனக்கு நீதான்

பிரதிக்கினை செய்வாயோ?

பிரபாகரன் நீதான் என்றால்

பிரபை எனக்கருள்வாயோ?







அற்றார்போல் என்னை ஆக்கியதேனோ கண்ணா!

ஆற்றாமையில் ஆதுலன் ஆனேனே கண்ணா!

இற்றுபோய காதல் காணாமல் போயதேன் கண்ணா!

ஈடேற்றுவாயோ ஈனம் உங்கண் கண்ணா!

உற்றது உற்றார் அறிய பறையாயோ கண்ணா!

ஊற்றுபோல் காதலில் சதி செய்ததாரோ கண்ணா!

எற்றைக்கும் என்றாயே என்னுயிர் கண்ணா!

ஏற்றார்போல் கரை சேர்ப்பாயோ கண்ணா!

ஐம்பொறி உணர்வற்று ஐயோவென்றானனே கண்ணா!

ஒற்றடம் போல் வருவாயோ என் கண்ணாளனே கண்ணா!

ஓர் என்மேல் குத்திரம் செய்தது நீதானே கண்ணா!

ஔடதம் மீராவுக்கு உன் காதல்தானே கண்ணா !





காதம் பல தூரம் என்றாலும்

கணக்காய் வந்து போற நிலா

ஆம்பல் பூவை கண்டாலும்

அலவை செய்து போற நிலா

களியாட்டு செய்தவனாய்

நிலையாய் நில்லாத என்னுள்ளும்

காந்தருவம் செய்த கன்னி நிலா

களன் மேல் ஊர்தி செய்ததினால்

அவாவு கொண்ட அவதியினால்

காயகற்பம் உண்டவன் காய சித்தி

கொண்டதுபோல் காந்து என்றேன் காமியமாய்!





மனசே! மனசே! நீயாகவும் நடப்பதில்லை

நானாகவும் நடக்க விடுவதில்லை

பாசம்கொண்ட போது புத்தியை தீட்ட சொல்லுகிறாய்

புத்தியை தீட்டும்போது பாசத்தை காட்ட சொல்லுகிறாய்

அம்மா சோறூட்டும் போது சாட்டியம் செய்தாய்

அழுக்கு மிட்டாய் வாங்க கடைக்கு வந்தாய்

பட்டு சொக்காய் பார்த்து ஏங்க செய்தாய்

கோபத்தோடு அக்காவோடு சண்டைக்கு நின்றாய்

அம்மா,அப்பா, இறந்த போது துக்கமாய் தொண்டையில் நின்றாய்

மாமனை கடைக்கண்னால் பார்க்க சொன்னாய்

அவன் போட்ட கொலுசை அவன்போல் ஸ்பரிசித்தாய்

ஆசைமுத்தம் தந்த போது நீயும்தானே படபடத்தாய்

மாமன் வேறோருப்பெண்ணை மணந்தபோது மெளனமாக அழசெய்தாய்

காதல் போயபோது வலி மட்டும் எனக்கு கொடுத்தாய்

இருதலைக்கொள்ளி எறும்பு போல தன்னந்தனியே தவிக்க விட்டாயே!



அம்மா காட்டி அமுதூட்டிய

பிள்ளை நிலா

திங்கள்தோறும் வந்து போகும்

அழகு பெண் நிலா

காதலோடு காண்பவர்களுக்கு பலதும்

காட்டும் கள்ளி நிலா

பூரணம் மட்டும் பெற்று விட்டால்

பொங்கிவழியும் தேன் நிலா

அல்லிபூவையும் அவசரமாய்

அலர செய்யும் இன்ப நிலா

காதல் அற்று போனவருக்கும்

காயம் கொடுக்கும் வெள்ளை நிலா







ககனம்வாழ் தேவர்ஒத்த கட்டாணிமேல்

கசடு அற்ற காதல் வயப்பட்ட காரிகை

கரியவன் கரடம் அறியாது கரிசனம் காட்டி

கடிவாளம் அறுந்து கண்டுமுட்டு செய்து

காலம் அறியாது காதலை சொல்லியதால்

கமலம் அவள் மேல் கவர்ச்சிக்கொண்டு

கவை தொட்டு கச்சு அவிழ்த்து இதழ் ஒற்று

கவுசிகம் அவளை கலவி கயக்கி

கற்புக்கு களங்கம் விளைத்து கன்மம் என்று

கள்ளன் கழுதறுத்து அவளை கறுவாக்கி போனானே!





பஞ்சு போல மனசகொண்டு விளக்கு ஏத்த வந்த என்ன

ஈரம் இல்லா நெஞ்சு கொண்டு வேணாமுன்னு பேசிபுட்ட

எண்ணையில்லா விளக்கு விடிஞ்சாலும் இருட்டுதான்

இருட்டுபோக திரியா என்ன சேத்துகிட்டா

நாட்டுக்கெல்லாம் நாம அண்ணாமல ஜோதிதான்.





கள்ளிச்செடி

யாரை வஞ்சித்தாய் உன்னை கள்ளி என்று அழைக்கிறார்கள்

வழிப்ப்றி கொள்ளையர்போல சாலை ஓரம் நிற்பதாலோ?

எவ்வளவு வறட்சியிலும் ஈரம் உன்னுள் இருப்பதால்

எப்போதும் எனக்கு நீ ஒரு தாய்தான்.





மஞ்சள் பூ



வானம் வழிவிட்டதால் அவள் காதலனை சுமந்தாள்

கர்ப்பத்தில் மலர்ந்தாள்.

நீல வானம் வழிவிட்டதால் நீ சூரிய கதிர் காதலனை

சுமந்தாயோ அவன் நிறம் கொண்டு அலர்ந்தாயோ?





மீன் தொட்டி



உங்கள் உரிமைகளை பற்றி பேசும் மானிடர்களே

எங்கள் உரிமையை பறிக்க அனுமதி தந்தது யார்?

இயற்கையில் பெற்ற அறிவில் ஒன்று குறைந்தவர்கள் என்றதாலோ

குறைந்தவர்களை குற்றவாளியாக்கும் உங்களைவிட எண்ணத்தில்

உயர்ந்தவர்கள் என்றதால்தான் எங்களை கண்ணாடி தொட்டியில் வைத்து

காட்சி பொருள் ஆக்கினாயோ?



முகம்

முகமே உன்னை தாமரைக்கும் சூரியனுக்கு ஒப்பிட்டாலும்

பெற்றவர்கள் தந்த அடையாளம் என்றே இருந்தேன்

அகத்திணையும் நீ காட்டுவதால் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் பாலை என்றே சொல்வேன்.



காதல் தவம்

ஆக்கியோன் கைப்பிழையோ நான்

ஆகாமியம் போதுமளவு செய்யவில்லையோ

ஆகாதவன் அதிகம் எனக்கல்லவோ

ஆகுலம் மட்டும் துணையல்லவோ

ஆசாபங்கம் பிரியாத நண்பனல்லவோ

ஆண்டகை என்று எண்ணியது தப்போ

ஆசாமி காதலில் எண்ணுவதேப்போ

ஆகாத்தியம் உன் சொந்தமறியேன்

ஆதபத்திரம் நீயல்லவோ

ஆணு நினைத்தது பிழையோ

ஆததாயிகள் ஆனதெப்போ

ஆசைக்காட்டி போனதேனோ

ஆகாச கமனம் செய்வதறியேன்

ஆசாரம்போல் மனப்பதேப்போ

ஆதரம் எனக்கு தருவதெப்போ

ஆதரிசனம் போல நானும்

ஆசாரவாசல் காத்து கிடந்தேன்

ஆங்காலம் வருவதெப்போ

ஆசிரயித்தல் தருவதெப்போ

ஆடவல்லான் பார்ப்பதெப்போ

ஆசிர்வாதம் எனக்கருள்வதெப்போ











கருப்பான முருக கடவுள் என்று உற்று பார்த்த அதே கணம் வெள்ளை மனம் என்னை தொற்றிக்கொண்டதை அறியாமல் இல்லை.உன் கருணைப்பார்வையால் தொட்டபோது எல்லாம் நான் தரையில் இருந்துக்கொண்டே வான வில்லில் ஊஞ்சல் கட்டி எண்ணக்கனவுகளுக்கு வர்ணம் பூசி ஒத்திகைப்பார்த்தேன். என் மனதில் தொற்றிக்கொண்டு நீயும் பிரகாசித்ததால் நிலவும் வாஞ்சையில் சிவந்தது. அம்மாவாசைக்கும் வெளிச்சம் பிடித்தது. மேகங்களுக்கும் கூட தாகம் வந்தது. சூரியனுக்கு கூட குளிர் எடுத்தது. இயற்க்கை செய்த தவறா இல்லை நான் தவறு செய்தேனா இரவும் பகலும் வித்தியாசம் தெரியவில்லை. மோகம் என்னுள் சொல்ல, செய்யக்கூடாததை சொன்னதும் செய்ததும் அன்றுதான். அது என் வாழ்வின் நன்நாளோ இல்லை பலர் கண்பட்ட கரி நாளோ தெரியவில்லை. மஞ்சள் கயிறு தருவாய் என்ற நம்பிக்கையில் நான். நீ வருவாய் என அந்தரத்தில் தொங்க விட்ட தூக்கு கயிறோ ?













ஈரம் கொண்ட நெஞ்சில் தாகம் இல்லை

நிறைவான குடத்தில் தளும்பல் என்றுமில்லை

ஆதவன் பார்க்கும் போது குளிரும் தெரிவதில்லை

திங்கள் தீண்டும் பொழுது வேனில் விழிப்பதில்லை

காதல் கொண்ட மனது தவறுகள் அறிவதில்லை

தவறுகள் அறிந்தபோது காதல் இருப்பதில்லை.

No comments:

Post a Comment